Friday, August 28, 2009

வாலறிவன்

இறைவன் தாள் தொழாவிட்டால் கற்றதனால் ஆய பயன் என்? என்கிறார் வள்ளுவர்.
கடவுளுக்கும் கல்விக்கும் என்ன தொடர்பு?
கடவுள் முழுமையான அறிவுடையவர். வாலறிவர்! நாமோ குறை அறிவுடையவர்கள்.
அறிவு, அறிவை இனம் காணவேண்டாமா? பாம்பின் கால் பாம்பு அறியுமல்லவா!

Saturday, August 15, 2009

ஒப்புரவு

"ஒப்புரவு ஒழுகு" என்னும் ஆத்திசூடிப் பாவிற்குப் பொருள் உரைப்போர், "உலக வழக்கத்தைக் கடைப்பிடி" என்கின்றார்கள். "ஒப்புரவு அறிதல்" என்னும் திருக்குறள் அதிகாரத்திற்கு விளக்கம் தருவோர், "உலக நடைக்கேற்ற உதவிகளைத் தெரிதல்" என்று உரைக்கின்றனர். இந்த இரண்டு பொருள்களும் முழுமையானதல்ல. அப்படியானால், "ஒப்புரவு" என்பதன் பொருள்தான் யாது? ஒரே குமுகாயமாகச் சேர்ந்து வாழவேண்டியவர்கள் மாந்தர்கள். எவரும் தனித்து வாழ்தல் என்பது இயலாத ஒன்று. மக்கள் எல்லாரும் ஒன்றுபட்டு வாழவேண்டுமானால் ஒருவருக்கு ஒருவர் உதவி வாழ்தல் வேண்டும். தம்மை ஒப்பப் பிறரையும் புரப்பதே - பேணுவதே - காப்பாற்றுவதே "ஒப்புரவு" எனப்படும். அவ்வாறு உதவி வாழ்பவனே மாந்தன் எனப்படுவான். பிறர்க்கு உதவி செய்யாமல் தனித்து வாழ்பவனை - தான் மட்டும் வாழ்பவனை மற்றவர்கள் ஒரு பொருளாக- உயிராகக்கூட மதிக்கமாட்டார்கள். 'பிணம்' என்றே கருதுவர். இதனையே வள்ளுவர், "ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும்". (குறள்.214) என்று கூறியுள்ளார். "ஓருயிர்க்கே உடம்பளித்தால் ஒப்புரவு இங்கு என்னாகும்" (பெருந்தொகை.188).